×

ராணாவை மீண்டும் தூசு தட்டும் ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் !!


இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனேவே நடிக்கயிருந்த படம் ராணா. இதில் ரஜினிக்கு ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடிக்க கமிட்டாகியிருந்தார்.

ஆனால், எதிர்பார்த்தபடி படப்பிடிப்பு நடக்கவில்லை. படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்ற சில தினங்களிலேயே ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. 
சிகிச்சைக்குப் பிறகு ரிஸ்க் எடுக்க விரும்பாத ரஜினி ராணா படத்தில் நடிக்காமல் அவருடைய இளைய மகள் செளந்தர்யா இயக்கிய கோச்சடையான் எனும் அனிமேஷன் படத்தில் நடித்தார். இரண்டு ஆண்டுகளாக வேலைகள் நடந்த அப்படம் இப்போது திரைக்கு வர தயாராகி விட்டது.

இந்நிலையில், வழக்கம்போல் ரஜினியின் அடுத்த படம் குறித்த செய்திகள் கோலிவுட்டில் புகையத் தொடங்கியுள்ளது. 

ரஜினியின் புதிய படத்தை கே.எஸ்.ரவிகுமார், கே.வி.ஆனந்த் மற்றும் ஷங்கர் ஆகிய இயக்குனர்களில் ஒருவர் இயக்குவார் என கூறப்பட்டது. தற்போது ரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.  உடல்நிலை காரணமாக நிறுத்தப்பட்ட ராணா படத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ரஜினியும் ரவிகுமாரும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால் ராணா படத்திற்கு முதலில் கமிட் ஆன தீபிகா படுகோனே மட்டும் தற்போது நடிக்கவில்லையாம். அவருக்கு பதிலாக வேறு பிரபலமான ஹீரோயினியை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்து இருக்கிறார்களாம். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் எனத் தெரிகிறது.