×

என்றென்றும் புன்னகை – திரை விமர்சனம்

ஜீவா, வினய், சந்தானம் மூவரும் இணைபிரியாத தோழர்களாக வளர்கிறார்கள்.
சிறு வயதிலையே தனது அம்மா ஓடிப்போய் விட்டதால், பெண்களை கண்டாலே ஜீவாவுக்கு அலர்ஜியாகிறது.

இதில் போதாக்குறைக்கு மூவரும் தாங்கள் கல்யாணமே பண்ணிக்கக் கூடாதுன்னு உறுதி மொழி வேற எடுத்துகிறாங்க.

ஆனால், வினய் பெண்களை பார்த்தாலே வலிய ஆரம்பித்துடுவார்.

 அப்படி இருந்தும் காதல் எனும் மாய வலைக்குள் சிக்காத அளவுக்கே அவரது டாவிருக்கும்.

இப்புடி கூத்து, கும்மாளம்ன்னு சுத்திட்டு இருந்த ஜீவா & கோ-வினர், த்ரிஷா, ஆன்ட்ரியாவுடன் சேர்ந்து ஒரு விளம்பரப் படத்தை எடுக்கிறார்கள்.

விளம்பரமும் பெரியளவில் ரீச் ஆகிறது, ஆனால் என்ன இதில் ஜீவாவுக்கும், ஆண்ட்ரியாவிற்கும் தான் டமால் டுமீல் சச்சரவு நடந்து விடுகிறது.

இதற்கிடையில் வினய், சந்தானத்துக்கு ஞானஉதயம் பிறந்து டும் டும் செய்துகொள்ள ஆயுத்தமாகின்றனர்.

இவர்களின் கட்டிமேள அழைப்பிதழ் ஜீவாவை அதிர்ச்சியில் ஆழ்த்த, நட்புக்கு குட் பை சொல்லிவிடுகிறார்.

வினய், சந்தானத்தின் மனமாற்றத்திற்கு காரணம் என்ன? ரெண்டு ஹீரோயின் இருக்கிறதாலாவது ஜீவாவுக்கு காதல் வந்துச்சா? இல்லையாங்கிறது இழுவை க்ளைமாக்ஸ்.

ஜீவா கொமடிக்கு கவுண்டர் கொடுப்பதிலும், நட்பிற்காக கரைவதிலும், காதலுக்காக உருகுவதிலும் செண்டம் எடுத்துள்ளார்.

 வினய் தனது வழக்கமான பாடி லாங்குவேஜையே இதிலும் பயன்படுத்தினாலும், சற்று கவனம் பெறுகிறார்.

சந்தானத்தின் கொமடி சர வெடிகள் படத்திற்கு பெரிய பலம், சில இடங்களில் தான் இவர்களின் சேஷ்ட்டைகள் அலுப்பு தருகிறது, மத்தபடி ஜோரா இருந்துச்சு.

த்ரிஷா வழக்கமான ஹீரோயினா வந்து டூயட் பாடிச் செல்லாமல், மனதை கொள்ளை கொள்ளும் வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

ஆண்ட்ரியாவை ஒரு பாட்டுக்கும், அவரது வசீகரப் பார்வைக்கும் மட்டுமே உபயோகப் படுத்தியிருக்கிறார்கள்.

மேலும் ஜெகன், நாசர், டி.எம்.கார்த்திக், அபிநய் ஆகியோர் படத்தின் தேவைகேற்ப நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் 'வான் எங்கும் நீ மின்ன, எனை சாய்த்தாளே' பாடல்கள் மட்டும் மனதை வருடுகிறது. பின்னணி இசை பெரிதாக கவரவில்லை.

மதியின் ஒளிப்பதிவு நம்மை அழகாக பிக்னிக் கூட்டிட்டு போன மாதிரி பீலிங்! படத்தொகுப்பாளர்கள் பிரவீன்-ஸ்ரீகாந்த் இன்னம் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம் பாஸ்.

'வாமனன்' அஹமத் இயக்கத்தில் முதல் பாதி முழுக்க கலகலவென செல்கிறது, இரண்டாம் பாதி இழுத்துக்கொண்டே போவதுதான் பெரிய சலிப்பை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில் என்றென்றும் புன்னகைன்னு சொல்லி குபீர் சிரிப்பலைகளை வரவழைத்ததில்லாமல், சில சென்டிமென்ட் ரசாயனத்தையும் மிக்ஸ் பண்ணி கலப்படம் செஞ்சுட்டாங்க.

நடிகர்கள்: ஜீவா, வினய், சந்தானம், நாசர், ஜெகன்
நடிகைகள்: த்ரிஷா, ஆண்ட்ரியா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம்: ஐ.அஹமத்
தயாரிப்பு: டாக்டர்.வி.ராமதாஸ், ஜி.கே.எம்.தமிழ் குமரன்.