சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடந்த இதன் தொடக்க விழாவில் நடிகர்கள் கமலஹாசன், அமீர்கான் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றினர். விழாவில் நடிகர்கள், டைரக்டர்கள் கமலஹாசனிடம் சரமாரி கேள்விகள் கேட்டனர். அவர்களது கேள்விகளை சுஹாசினி மேடையில் படிக்க கமல் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:–
நடிகர் சூர்யா கேள்வி:– உலக நாயகன் கமலஹாசன் டைரக்டராக உருவெடுக்க பின்னணி சக்தி என்ன?
கமலஹாசன் பதில்:– உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. இயக்குனர் ஆர்.சி.சக்திதான் அதற்கு காரணம்.
சூர்யா:– நாளுக்கு நாள் சினிமாவை நேசிக்கிறீர்களே? அந்த நேசிப்புக்கு உங்களை இயங்க வைக்கும் சக்தி எது?
கமல்:– ஒரு காலத்தில் உலக சினிமாக்களை பார்ப்பது கனவாக இருந்தது. பாலு மகேந்திரா மாதிரியான ஆட்கள் பார்த்து விட்டு வந்து சொல்வார்கள். அந்த படத்தை கற்பனை ஓட்டத்திலேயே எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்ப்போம். எல்லாமே தேடி போய் கற்றவை தான். பல விஷயங்களை கேள்வி ஞானத்தால் தெரிந்து கொண்டேன்.
நடிகை ஸ்ரீப்ரியா:– வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் ஆகிய படங்களை ரீமேக் செய்வதாக இருந்தால் எந்த படத்தில் நடிப்பீர்கள்?
கமலஹாசன்:– கப்பலோட்டிய தமிழன் படத்தில் நடிப்பதாக இருந்தால் சுப்பிரமணிய சிவா வேடத்தில் நடிக்க விரும்புகிறேன். ஏனென்றால் அந்த வேடத்தில் எங்கள் சண்முகம் அண்ணாச்சி நடித்து இருந்தார். ஜாக்சன் துரையாகவும் நடிக்கலாம். தசாவதாரம் படத்தில் ஸ்லெட்சர் ஆக நடித்து இருக்கிறேன்.
ஸ்ரீப்ரியா:– இந்திய சினிமா நூற்றாண்டு விழா பரிசாக ரஜினியும், நீங்களும் இணைந்து நடிப்பீர்களா?
கமலஹாசன்:– ரசிகர்களாகிய உங்களுக்கு அது பரிசு எங்களுக்கு நான் தயார்? அவர் தயாரா? என்று கேட்க வேண்டும். இரண்டு பேரையும் வைத்து படம் எடுக்க வசதியான தயாரிப்பாளரும் கிடைக்க வேண்டும்.
ரமேஷ்அரவிந்த்:– ‘தூம்–3, ‘விஸ்வரூபம்–2’ சத்தியமானது போல் ‘கமல ஹாசன்–2 சாத்தியமா?
கமலஹாசன்:– நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. தலை முறைகள் மாறி வருகின்றன.
ரமேஷ் அரவிந்த்:– சினிமாவில் தொழில்நுட்பங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றனவே?
கமல்:– கருவிகள்தான் மாறும் கலை மாறாது.
இளையராஜா:– உலக சினிமாக்களோடு தமிழ் சினிமாக்கள் ஒட்ட வில்லையே?
கமல்:– தமிழ் சினிமாவுக்கு ஒன்றரைக்கண் கண்ணாடி போட்டால் சரியாகி விடும்.
பாலுமகேந்திரா:– தமிழர்களாகிய நம்மால் ஏன் உலக சினிமாவில் கலக்க முடியவில்லை.
கமல்:– 35 வருடங்களுக்கு முன்பே இதை பற்றி உங்களிடம் பேசி இருக்கிறேன். பாலு மகேந்திராவால் உருவானவர்கள் நிறைய பேர் அதில் நானும் ஒருவன். அவர் தோள் மேல் கை போட்ட சினிமா கற்றுக் கொண்டவன் நான்.
எஸ்.பி.பாலசுப்பிர மணியம்:– தற்போதைய சென்சார் போர்டு திருப்தி அளிக்கிறதா?
கமல்:– தணிக்கை குழுவில் சினிமாவை யோசிப்பவர்களும் இருக்கிறார்கள். அரசியல்வாதிகளும் தங்கள் கட்சிகள் சார்பில் அங்கே ஆட்கள் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். தகுதி உடையவர்கள் அங்கு இருந்தால் சென்சார் போர்டு இன்னும் சிறப்பாக செயல்படும்.
கவிஞர் நா.முத்துக்குமார்:– இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான தூரம் அதிகமாக இருக்கிறதே?
கமல்:– பாலம் அமைக்க யாருமில்லை. எழுத்தாளர் பாலகுமரானோடு இதை பற்றி பல வருடங்களுக்கு முன்பே பேசி இருக்கிறேன். ஒலிச்சித்திரம் மூலம் கேட்கப்படும் ஒரு சினிமா புரிகிறதென்றால் அது நல்ல சினிமா அல்ல என்று பாலுமகேந்திரா அடிக்கடி சொல்வார். ஒலி ஓசைகளால் நிரப்பப்படுவது அல்ல சினிமா. ஷேக்ஸ்பியர் இப்போது வந்தாலும் தற்போது சினிமா சூழலுக்கு ஏற்ப சினிமா கற்றுக் கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறது.
இவ்வாறு கமல் பதில் அளித்தார்.
